கோவையில் 2 இடங்களில் செல்போன் பறிப்பு- சிறுவன் உள்பட 3 பேர் கைது
கோவை:
கோவை போத்தனூர் அருகே உள்ள அண்ணாபுரத்தை சேர்ந்தவர் ரசல் வில்லியம்ஸ் (21). சம்பவத்தன்று இவர் காமில் நகர் தண்ணீர் தொட்டி அருகே தனது நாயுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ரசல் வில்லியம்சை கடுமையாக தாக்கினர். பின்னர் அவர் வைத்து இருந்த செல்போனை பறித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து ரசல் வில்லியம்ஸ் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தாக்கி செல்போனை பறித்து சென்ற மெட்டூரை சேர்ந்த பூபாலன் என்கிற பாலகிருஷ்ணன் (26), சித்தண்ணபுரத்தை சேர்ந்த சிட்ரிக் (20) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ரத்தினபுரி அருகே உள்ள ஓஸ்மின் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (24). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் அயர்ந்து உறங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 14 வயது சிறுவன், மணிகண்டனின் செல்போனை திருடிச் தப்பிச் செல்ல முயன்றான்.
அவனை மணிகண்டன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்தார். பின்னர் சிறுவனை ரத்தினபுரி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.