செய்திகள்
தண்ணீர் குழாய்

திருட்டு தனமாக தண்ணீர் எடுத்த 190 வீடுகளுக்கு இணைப்பு துண்டிப்பு

Published On 2019-07-22 09:28 GMT   |   Update On 2019-07-22 09:28 GMT
சென்னையில் திருட்டு தனமாக தண்ணீர் எடுத்த 190 வீடுகளுக்கு இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.
சென்னையில் வீடுகளுக்கு இணைப்பு செல்லும் தண்ணீர் குழாய்களில் இருந்து சில வீடுகளில் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சுகிறார்கள். 0.5 குதிரை திறன் சக்தி கொண்ட மோட்டார் மூலம் இவ்வாறு தண்ணீரை திருட்டுத்தனமாக எடுக்கிறார்கள்.

இதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக சென்னை அண்ணா நகரில் அதிகமாக இவ்வாறு தண்ணீர் எடுப்பது நடக்கிறது. அங்கு 50 வீடுகளில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல நகரின் பல பகுதிகளிலும் தவறாக தண்ணீர் எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் முதல் 15 நாளில் 31 வீடுகளில் இவ்வாறு திடுட்டுத்தனமாக தண்ணீர் எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடுகளில் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இதுவரை 190 வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டித்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் இவ்வாறு தண்ணீர் எடுத்தால் வீடுகளுக்கு ரூ.10 ஆயிரமும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். 3 மாதங்களுக்கு தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படும். ஆனால் இப்போது ஒரு வருடத்திற்கு தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையில் அண்ணா நகர் தவிர அம்பத்தூர், பெரம்பூர், திரு.வி.க. நகர், கொளத்தூர், பாடி, கொரட்டூர், எழும்பூர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் தண்ணீரை மோட்டார் மூலம் திருடுவது அதிகமாக நடக்கிறது.

இவ்வாறு யாராவது தண்ணீர் எடுப்பது தெரிந்தால் 81449 13000 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News