செய்திகள்
முருகானந்தம்

திண்டிவனத்தில் பெண் கொலை கைதான வியாபாரி கடலூர் சிறையில் அடைப்பு

Published On 2019-07-21 12:49 GMT   |   Update On 2019-07-21 12:49 GMT
திண்டிவனத்தில் பெண்ணை கத்திரிகோலால் குத்தி கொலை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு குட்டிகாரன் தெருவை சேர்ந்தவர் பானுமதி (வயது 54). இவருக்கு சாந்தி (34) என்ற மகளும், பாலாஜி (28) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாந்திக்கும், புதுவை மாநிலம் தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த உறவினரான முருகானந்தம் (42) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

அதன் பிறகு முருகானந்தம் மாமியார் வீட்டிலேயே தங்கியிருந்தார். அங்கு அவர் சூப் கடை மற்றும் கோழிக்கறிகடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் முருகானந்தத்துக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தனது மனைவி சாந்தியிடம் உன் பங்கில் உள்ள சொத்தை வாங்கி வரும்படி அடிக்கடி துன்புறுத்தி வந்தார்.

நேற்று முன்தினம் இரவும் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அங்கு வந்த மைத்துனர் பாலாஜி ஏன் சண்டை போடுகிறீர்கள் என தட்டிக்கேட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த முருகானந்தம் கத்திரிகோலால் பாலாஜியை குத்தினார். அவரது சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த பானுமதி தடுக்க முயன்றார். அவரையும் முருகானந்தம் கத்திரிகோலால் குத்தினார். கழுத்தில் படுகாயம் அடைந்த பானுமதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரோசனை போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான முருகானந்தத்தை தேடி வந்தனர். நேற்று இரவு அவர் திண்டிவனம்-செஞ்சி பஸ்நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார் முருகானந்தத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

போலீசில் முருகானந்தம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடன் தொகை அதிகரித்தது. இதனால் மனைவியிடம் சொத்தில் பங்கு வாங்கிவரும்படி கூறினேன். இதனால் ஏற்பட்ட தகராறில் மாமியாரை கத்திரிகோலால் குத்தி கொன்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கைதான முருகானந்தத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து முருகானந்தம் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News