திருக்கனூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தொழிலாளி மயங்கி விழுந்து பலி
திருக்கனூர்:
திருத்தணி அருகே ராஜ பத்மநாபபுரத்தை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 46). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிறுவனம் மூலம் வெல்டிங் வேலை செய்வதற்காக திருக்கனூர் அருகே தேத்தாம்பாக்கத்தில் உள்ள சொட்டு நீலம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்காதரன் வந்திருந்தார். தொழிற்சாலையில் உள்ள குடியிருப்பில் தங்கி அவர் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று கங்காதரன் தொழிற்சாலையில் ஜே.சி.பி. எந்திரத்தில் நின்று கொண்டு வெல்டிங் வேலையில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் கங்காதரனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கங்காதரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் மின்சாரம் தாக்கி கங்காதரன் இறந்து போனதாக தெரிவித்தனர். இதனையடுத்து காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் சந்தேக மரணமாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.