செய்திகள்
கைது

திண்டுக்கல்லில் தொடர் வழிப்பறி - வடமாநில பெண்கள் உள்பட 8 பேர் கைது

Published On 2019-07-20 12:51 GMT   |   Update On 2019-07-20 12:51 GMT
திண்டுக்கல்லில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில பெண்கள் உள்பட 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 25 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சமீப காலமாக வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமலைச்சாமிபுரத்தில் தவமணி (வயது65) என்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

இந்தவழக்குகள் அனைத்தையும் தனிப்படை அமைத்து விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். டி.எஸ்.பி.மணிமாறன் தலைமையில் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ் பெக்டர் மகேஷ் மற்றும் குற்றப் பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். திருமலைச்சாமிபுரத்தில் நடந்த வழிப்பறியின்போது அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான உருவத்தை வைத்து கொள்ளையனை தேடி வந்தனர்.

இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமா நிலத்தை சேர்ந்த நபர்கள் என தெரிய வந்தது. செம்பட்டி அருகில் உள்ள புல்வெட்டி கண்மாய் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த சிலர் குடும்பத்துடன் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது கொள்ளையில் ஈடுபட்ட யூனூஸ், அலிஅக்பர் என தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கொள்ளை சம்பவத்தில் ரோசன் பீவி, மரியம், சோபியா, சுரேயா உள்பட 8 பேர் சம்மந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
Tags:    

Similar News