தேனியில் 2 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
தேனி:
அன்சருல்லா என்ற அமைப்புக்கு துபாயில் நிதி திரட்டி தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் 14 பேரை டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்கள் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
துபாய் போலீசார் தகவலின் படி 14 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 14 பேரின் வீடுகளில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் முகமது கனி மகன்களான மீரான், முகமது அப்சல் ஆகியோர் வசித்து வந்தனர்.
இவர்கள் 2 பேரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு சீனிவாச ராவ் என்பவரது தலைமையில் போலீசார் இன்று காலை 6.10 மணிக்கு வந்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் சோதனை நடத்திய போது வேறு யாரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் இருந்த ஆவணங்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டு இருந்த தகவல்கள், செல்போனில் தொடர்பு கொண்ட எண்கள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை சேகரித்தனர். மேலும் முகமது அப்சல் மற்றும் மீரான் ஆகியோரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து 2 வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதால் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு வேறு யாரிடமாவது விசாரணை நடத்தப்படுமா? என தெரிய வரும். இந்த சோதனையில் உத்தமபாளையம் துணை தாசில்தார்கள் கண்ணன் மற்றும் செல்வம் ஆகியோரும் உடன் இருந்தனர்.