கும்பகோணத்தில் பெண்ணை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டதில் கோஷ்டி மோதல்- 2 பேருக்கு கத்திக்குத்து
கும்பகோணம்:
கும்பகோணம் கர்ண கொல்லை அக்ரஹாரத் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன்கள் சுரேஷ் (51) மற்றும் ஆனந்த் (45). ஆட்டோ டிரைவர்கள். சுரேஷின் மகள்களை அப்பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன்கள் கணேஷ் (25), ராஜா (22) மற்றும் மணி மகன்கள் விக்னேஷ் (27) மற்றும் விக்ரம் (22) ஆகிய நான்கு பேரும் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், நான்கு பேரையும் தட்டி கேட்டார். தகவலறிந்து சுரேஷின் தம்பி ஆனந்த் வந்ததால் வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதை தொடர்ந்து இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் உருட்டுக்கட்டை மற்றும் கத்தியால் குத்தி தாக்கி கொண்டனர். இதில் ஆனந்த் மற்றும் கணேஷிற்கு கத்தி குத்து விழுந்தது.
இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக இரு தரப்பினரும் மேற்கு போலீசில் புகாரளித்தனர். இதன்பேரில் சுரேஷ், விக்னேஷ், விக்ரம், ராஜா ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.