செய்திகள்
மழை

கொடைக்கானல் மலை கிராமங்களில் விடிய விடிய மழை

Published On 2019-07-19 11:06 GMT   |   Update On 2019-07-19 11:06 GMT
கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் விடிய விடிய பெய்த மழையினால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு சாரல் மழைபெய்தது.

இதேபோல மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, கிளாவரை, வடகவுஞ்சி ஆகிய பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. பல நாட்களாக மழையை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வறட்சியின் காரணமாக எலும்பள்ளம் ஏரி, குண்டம்பாச்சி, கூக்கால், கோணலாறு, அருங்காட்டுபள்ளம், தொழுவம்பட்டி ஆகிய ஏரிகள் வறண்ட நிலையில் காணப்பட்டது. தற்போது பெய்த மழையினால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மழை இல்லாததால் விவசாய பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இந்தநிலையில் தற்போது பெய்த மழை விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

மேலும் சில நாட்கள் மழை பெய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். மேலும் கீழ்மலை கிராமங்களான தாண்டிக்குடி, பெரும்பாறை ஆகிய பகுதிகளிலும் 1½ மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இப்பகுதிகளில் பல இடங்களில் பி.எஸ்.என்.எல். சேவை கிடைக்காததால் மக்கள் சிரமம் அடைந்தனர்.

Tags:    

Similar News