திருவையாறு அருகே ஆட்டோ மீது பஸ் மோதல்- பள்ளி மாணவர் பலி
திருவையாறு:
தஞ்சை மாவட்டம் திருவையாறில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த பள்ளிகளுக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் சிலர் ஆட்டோவில் வந்து செல்கின்றனர்.
திருவையாறை அடுத்த மேல திருபூந்துருத்தியில் இருந்து 8 மாணவ- மாணவிகள் ஒரு ஆட்டோவில் திருவையாறில் உள்ள பள்ளிகளுக்கு இன்று காலை வந்தனர். அந்த ஆட்டோ கண்டியூர்- திருக்காட்டுப்பள்ளி சாலையில் காட்டுகோட்டை பகுதியில் சென்ற போது தஞ்சையில் இருந்து கழுமங்கலம் நோக்கி மாணவிகள் சென்ற ஆட்டோவின் பின்புறம் மோதியது. இதில் மேலதிருப்பூந்துருத்தி வரதராஜபெருமாள் கோவில் தெருவை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர் ஐங்கரன் (வயது 11), அதே ஊரை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி சந்தியா (14) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த அவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஐங்கரன் பரிதாபமாக இறந்தார். மாணவி சந்தியா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றிய புகாரின் பேரில் நடுகாவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு அருகே ஆட்டோ மீது பஸ் மோதியதில் பள்ளி மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.