செய்திகள்
குன்னம் அருகே பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
குன்னம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
குன்னம்:
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசுக்கல்லூரி மாணவர்களான கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே உள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்த ரவி(24) என்பவரும், பெரம்பலூர் மாவட்டம் எழுமூர் அருகே உள்ள ஆய்க்குடி கிராமத்தை சேர்ந்த சங்கீதா(22), என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு கோரி பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே உள்ள மங்கலமேடு காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
போலீசார் இருவரின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரவியின் பெற்றோர்கள் காதலை ஏற்று கொண்டனர். சங்கீதாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரவியின் பெற்றோர்கள் இருவரையும் அழைத்து சென்றனர்.