கோவையில் 4 வயது சிறுவன் மர்ம மரணம்: வளர்ப்பு தந்தை-தாயிடம் போலீசார் விசாரணை
கோவை:
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது சகோதரர் பெரியசாமி (வயது 27). இவர் கோவை கணபதிபுதூரில் தங்கி இருந்து அந்த பகுதியில் லேத் ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலவாணி (23). இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை.
எனவே பெரியசாமி தனது அண்ணனின் 3-வது மகனான பிரேம் (4) என்பவரை வளர்பதாக கூறி கடந்த 20 நாட்களுக்கு முன்பு கோவைக்கு அழைத்து வந்தார். பின்னர் சிறுவனை தன்னுடன் வைத்து பராமரித்து வந்தார்.
நேற்று காலை பெரியசாமி வழக்கம் போல வேலைக்கு சென்றார். வீட்டில் கோகிலவாணி, பிரேமுடன் இருந்தார்.
மாலையில் பெரியசாமி வேலை முடிந்ததும் வீட்டுக்கு திரும்பினார். அப்போது பிரேம் தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தான்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் என்ன நடந்தது என்று கோகிலவாணியிடம் கேட்டார். அவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறினார்.
இதனையடுத்து பெரியசாமி, பிரேமை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரேம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் டாக்டர்கள் சிறுவனின் சாவில் சந்தேகம் இருப்பதால் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து பெரியசாமி, கோகிலவாணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாவுக்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.