செய்திகள்
ஊத்தங்கரை அருகே பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு
ஊத்தங்கரை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி செயினை முகமூடி கொள்ளையர்கள் பறித்த சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அவ்வை நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி லட்சுமி. இவரது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். லட்சுமி தனது மகனுக்கு மதிய உணவு கொண்டு வந்து பள்ளியில் கொடுத்து விட்டு செல்வது வழக்கம்.
நேற்று மதியம் வழக்கம் போல் பள்ளியில் படிக்கும் தனது மகனுக்கு லட்சுமி சாப்பாடு கொண்டு சென்றார். அப்போது அவர் சேலம் ரோட்டில் நடந்து சென்றபோது லட்சுமியின் பின்னால் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். இதில் லட்சுமி கீழே விழுந்தார். உடனே அவர் திருடன் திருடன் என்று கத்தி கூச்சலிட்டார். அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து செந்தில் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குபதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றார். தனியாக நடந்த சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிள் வந்த முகமூடி கொள்ளையர்கள் தாலி செயினை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.