செய்திகள்
முன்னறிவிப்பு இன்றி ஆலையை மூட உத்தரவு - வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு
மாசு கட்டுப்பாடு வாரிய விதிகளை பின்பற்றியபோதும் முன்னறிவிப்பு இல்லாமல் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
சென்னை:
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்தாண்டு மக்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.
இதனிடையே ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை பின்பற்றியபோதும் எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. ஆலையால் மிக குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது என வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்தது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.