செய்திகள்
நாமக்கல் கலெக்டர் நிவாரணம் நிதி வழங்கிய போது எடுத்த படம்

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் - கலெக்டர் வழங்கினார்

Published On 2019-07-16 17:09 GMT   |   Update On 2019-07-16 17:09 GMT
கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதியை குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கி கடன்உதவி, குடிசை மாற்றுவாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு 440 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா முத்தையம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேந்தமங்கலம் தாலுகா பொன்னார்குளம் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும், கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த கொசவன்குட்டை பகுதியை சேர்ந்த செல்லம்மாள் என்பவருக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ஒளிரும் அதிநவீன ஊன்று கோலையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கான உபகரணங்களையும் என மொத்தம் ரூ.10 ஆயிரத்து 600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இலாஹிஜான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) பிரேமலதா உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News