செய்திகள்
கொலை

பழனி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனார் வெட்டிக் கொலை

Published On 2019-07-16 10:21 GMT   |   Update On 2019-07-16 10:21 GMT
பழனியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

பழனி:

பழனி அருகில் உள்ள சிவகிரிபட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் சிலம்பரசன் (வயது25). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். திருமணமாகவில்லை. தினமும் வேலைக்கு சென்று மாலையில் நண்பர்களுடன் மது அருந்துவது வழக்கம்.

அதன்படி நேற்று மாலை பாலசமுத்திரம் அருகில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது சிலம்பரசனுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த 2 பேர் சிலம்பரசனை கத்தியால் குத்தி அரிவாளால் வெட்டினர். இதை பார்த்த மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை பார் ஊழியர்கள் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர். சிலம்பரசனுடன் தினமும் வேலைக்கு செல்லும் நபர்கள் மற்றும் மது குடிக்கும் நண்பர்கள் ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News