ஊத்துக்கோட்டையில் பீடி தொழிலாளர்கள் போராட்டம்
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 1000 பீடித் தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலூக்கா அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். இதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் மெய்யூர் ஊராட்சிக்குட்பட்ட குருபுரம் பகுதியில் வீட்டுமனைகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஆனால் இதுவரை வீட்டு மனை ஒதுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிகிறது.
இதனை கண்டித்தும் உடனே வீட்டுமனைகள் வழங்கக்கோரியும் பீடித் தொழிலாளர்கள் சுமார் 200 பேர் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீடி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பலராமன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் சுந்தரராஜன், சி.ஜ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன், துணைச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அவர்கள் சி.ஜ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் தாசில்தார் வில்சனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.