கபிஸ்தலம் அருகே முன்விரோத தகராறில் தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு - 6 பேர் கைது
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் மேல அக்ரஹாரத்தில் வசிப்பவர் செல்வராஜ் (வயது52). விவசாயக் கூலி. இவருக்கும் அதே தெருவில் வசிக்கும் ராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக வருகிறதாம்.
சம்பவத்தன்று இரவு நடந்து சென்ற செல்வராஜ், அவரது மகன் வேல்முருகன் (25) ஆகிய இருவரையும் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் அஜித், அய்யப்பன், உமையாள்புரம் பெருமாள் கோவில் தெரு செல்லப்பா மகன் அருள்பிரகாஷ்(24), புளியம்பட்டி குடியான தெரு தண்டபாணி மகன்கள் கபில் (24), தினேஷ் (23), கணேசன் மகன் விஜய் (24), கருப்பையன் (48), கணேசன் (50) ஆகிய 9 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டினர்.
இதில் படுகாயமடைந்த தந்தை-மகன் இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கபில், தினேஷ், விஜய், கருப்பையன், கணேசன், அருள்பிரகாஷ் ஆகிய 6 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜா, அய்யப்பன், அஜீத் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.