உசிலம்பட்டி அருகே விபத்து - 2 பேர் பலி
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நல்லிவீரன்பட்டியை சேர்ந்தவர் சடையாண்டி. இவரது மகன் ரூபன் (வயது21). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
உசிலம்பட்டியில் இன்று நடந்த விசேஷத்திற்கு ரூபன் மற்றும் அவருடன் படிக்கும் கோவை மாவட்டம் போத்தனூரைச் சேர்ந்த தவுசிக் (21) மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
மதியம் 11 மணி அளவில் ரூபன் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக தவுசிக்குடன் சென்றார். மதுரை- உசிலம்பட்டி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் சென்று விட்டு மண்டபத்திற்கு திரும்பினர்.
அங்குள்ள தியேட்டர் அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்புறத்தில் வந்த ஆட்டோ திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரூபன், தவுசிக் தூக்கி வீசப்பட்டனர்.
இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்குள் ரூபனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். ரூபன், தவுசிக் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.