செய்திகள்
கைது

தேனி அருகே 4 கிலோ கஞ்சாவை குப்பையில் வீசிவிட்டு தப்பி ஓடிய வியாபாரி கைது

Published On 2019-07-13 16:38 GMT   |   Update On 2019-07-13 16:38 GMT
தேனி அருகே போலீசாரை பார்த்ததும் 4 கிலோ கஞ்சாவை குப்பையில் வீசிவிட்டு தப்பி ஓடிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
தேனி:

தேனி அருகே போலீசாரை பார்த்ததும் 4 கிலோ கஞ்சாவை குப்பையில் வீசிவிட்டு தப்பி ஓடிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி அருகே கோடாங்கிபட்டி பகுதியில் கஞ்சா விற்பனை அடிக்கடி நடந்து வருகிறது. இங்கு கடந்த வாரம் கஞ்சா விற்பனை செய்த தாய், மகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜே‌‌ஷ்கண்ணா தலைமையில் தனிப்பிரிவு போலீஸ்காரர் அருள்ராஜ் மற்றும் போலீசார் சிலர் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கூட்டுறவு வங்கி அருகே நின்று கொண்டு இருந்த ஒருவர் போலீசார் வருவதை பார்த்ததும், தனது கையில் இருந்த சாக்குமூட்டையை அங்கு கிடந்த குப்பையில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த மூட்டையை எடுத்து பார்த்தபோது, அதற்குள் 2 பண்டல்களில் மொத்தம் 4 கிலோ கஞ்சா இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தப்பி ஓடியது அதே ஊரை சேர்ந்த கருத்தப்பாண்டி (வயது 47) என்பதும், அவர் கஞ்சா வியாபாரி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை விடிய, விடிய தேடி வந்தனர்.

இந்நிலையில் எங்கோ தலைமறைவாக இருந்துவிட்டு, அதிகாலையில் அவர் தனது வீட்டுக்கு வந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று அதிகாலை போலீசார் அவருடைய வீட்டுக்கு சென்று அங்கு இருந்த கருத்தப்பாண்டியை கைது செய்தனர்.

பின்னர் அவர் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News