செய்திகள்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2019-07-12 21:29 GMT   |   Update On 2019-07-12 21:29 GMT
தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தினமும் குறைந்தது ஒரு டி.எம்.சி. அளவுக்காவது தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு முன்வர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதை தொடர்ந்து கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளின் நீர்மட்டம் கடந்த சில நாட்களில் மட்டும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.


கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையம் மூலம் ஏற்பாடு செய்யும்படி ஆணையிட்டு இருந்ததாக கூறியது முழுக்க, முழுக்க ஏமாற்று வேலையாகும். தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்கனவே ஆணையிட்டிருக்கும் நிலையில் கர்நாடக அரசே எந்த நேரத்திலும் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீரை திறந்துவிட முடியும்.

தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காமல் ஏமாற்ற புதுப்புது வழிகளில் கர்நாடக அரசு முயல்வதையே குமாரசாமியின் செயல்கள் காட்டுகின்றன. தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட தேவையான அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் உள்ளது. எனவே மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தினமும் குறைந்தது ஒரு டி.எம்.சி. அளவுக்காவது தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News