செய்திகள்
செங்கிப்பட்டி அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம்
செங்கிப்பட்டி அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்த பாளையப்பட்டி அருகே உள்ள குணம்பட்டியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது70). இவருடைய மகன் முருகப்பராஜா(35). இவரது மகன் சிவக்குமார் (14), மகள் காயத்திரி (12), தியாகராஜனின் சம்மந்தி லட்சுமி (70) ஆகியோர் நேற்று முன்தினம் செங்கிப்பட்டி அருகே வெண்டையம் பட்டியில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காரில் ஊர் திரும்பினர்.
அப்போது தஞ்சை- திருச்சி சாலையில் செங்கிப்பட்டி அருகே வந்தபோது கார் நிலை தடுமாறி சாலை யோரம் இருந்த இரும்பு பலகை மீது மோதியது. இதில் காரில் இருந்த தியாகராஜன், முருகப்பராஜா, சிவக்குமார், காயத்ரி, லட்சுமி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.