கீழக்கரையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை
கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தெற்கு தெரு பகுதி சொக்கநாதர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் நாகராஜ் (வயது 32).
சென்னையில் சுண்டல் வியாபாரம் செய்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார். நேற்று இரவு வீட்டின் அருகே நாகராஜ் நடந்து சென்றார்.
அப்போது அங்கு 2 பேர் வந்தனர். அவர்கள் நாகராஜூடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் நாகராஜின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. கீழக்கரை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலை தொடர்பாக கீழ பாளையரேந்தல் ராமையா மகன் லட்சுமணன் மற்றும் அடையாளம் தெரிந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.