செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Published On 2019-07-10 17:05 GMT   |   Update On 2019-07-10 17:05 GMT
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வலியுறுத்தி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல்:

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு மோட்டார் வாகன தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாமக்கல் வட்ட லாரி பாடிகட்டும் உரிமையாளர்கள் சங்க தலைவர் புகழேந்திரன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் சிங்காரம் வரவேற்று பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மோட்டார் தொழிலை பாதுகாக்க 2017-ம் ஆண்டு சாலை பாதுகாப்பு மசோதாவிற்கு முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவேண்டும். இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்கவேண்டும். நவீனமயம் என்ற பெயரில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை நசுக்கக்கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் நாமக்கல் வட்ட லாரி பாடிகட்டும் உரிமையாளர்கள் சங்க முன்னாள் துணை தலைவர் அருணாசலம், நாமக்கல் மாவட்ட மோட்டார் சைக்கிள் மெக்கானிக் அசோசியேசன் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் ரவிக்குமார், ஓட்டுனர் பயிற்சி பள்ளி அசோசியேசன் தலைவர் சண்முகம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலாளர் வேலுசாமி மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News