செய்திகள்
மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

காற்றின் வேகம் குறைந்தது - 11 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

Published On 2019-07-10 10:34 GMT   |   Update On 2019-07-10 10:34 GMT
நேற்று காற்றின் வேகம் குறைந்து காணப்பட்டதால் நாட்டுப்படகு மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுவிட்டு இன்று காலையில் கரை திரும்பினர்.
அதிராம்பட்டினம்:

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டை மறவக்காடு, அதிராம்பட்டினம், கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, கடற்கரை தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 11 நாட்களாக கடலில் தொடர்ந்து பலத்த சூறைக்காற்று வீசி வந்தது.

மேலும் கடல் நீர் உள்வாங்குவதும் வெளியேறுவதும் மாறி மாறி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடல் கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு எதுவரையிலும் இல்லாத அளவுக்கு அதிக தூரம் உள்வாங்கியது.

இதையடுத்து பலத்த காற்று வீசி வந்தது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கடும் வேகத்துடன் கூடிய சூறைக்காற்றை சமாளிக்க முடியாமல் தடுமாறினர்.

மேலும் ஒரு கட்டத்தில் படகு கடலுக்குள் கவிழ்ந்து விடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மீனவர்கள் வேறு வழியின்றி மீன்பிடிக்காமல் பாதியிலேயே கரை திரும்பினர்.

இதே நிலை நீடித்ததால் கடந்த 11 நாட்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு காற்றின் வேகம் குறைந்து காணப்பட்டதால் நாட்டுப்படகு மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுவிட்டு இன்று காலையில் கரை திரும்பினர்.


Tags:    

Similar News