திண்டுக்கல் அருகே 24 கிலோ கஞ்சாவுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது
தாடிக்கொம்பு:
தேனி மாவட்டம் கம்பம், போடி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கஞ்சா கடத்தி வந்து திண்டுக்கல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தெய்வம், போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரை வழி மறித்து போலீசார் சோதனையிட்டனர்.
அதில் 24 கிலோ கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. போலீசார் காரில் வந்தவர்களை விசாரித்த போது அவர்கள் செட்டிநாயக்கன்பட்டி இ.பி. காலனியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 43). அவரது மனைவி ரேவதி (37), மகன் சூர்யபிரகாஷ் என தெரிய வந்தது.
அவர்கள் பல நாட்களாக கஞ்சா கடத்தி வந்து திண்டுக்கல் பகுதியில் விற்பனை செய்ததையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர். இவர்களுக்கு வேறு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? கஞ்சா எங்கிருந்து வாங்கி வருகின்றனர்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.