செய்திகள்
ராஜகோபால்

அவகாசம் கிடையாது- ராஜகோபால் உடனடியாக சரண் அடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2019-07-09 05:45 GMT   |   Update On 2019-07-09 05:45 GMT
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட ராஜகோபால் சரண் அடைவதற்கு அவகாசம் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம், உடனடியாக சரண் அடையும்படி உத்தரவிட்டது.
சென்னை:

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது கூட்டாளிகள் 8 பேருக்கு 9 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம்  கடந்த 2004-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து அனைவரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட் கொலை குற்றத்தை கருத்தில் கொள்ளாமல் கீழ் கோர்ட்டு குறைந்த தண்டனை வழங்கி இருப்பதாக கூறி தண்டனையை உயர்த்தி தீர்ப்பளித்தது. ராஜகோபால் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது. மற்றவர்களுக்கு கீழ் கோர்ட்டு விதித்த தண்டனை உறுதி செய்யப்பட்டது.



இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் உள்ளிட்ட அனைவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. அத்துடன் ஜூலை 7-ந்தேதிக்குள் பூந்தமல்லி கோர்ட்டில் அனைவரும் சரண் அடைந்து ஜெயில் தண்டனையை அனுபவிக்க செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் ராஜகோபால் சரண் அடையவில்லை. உடல்நலக்குறைவு மற்றும் சிகிச்சையை காரணம் காட்டி, சரண் அடைவதற்கு அவகாசம் வழங்கும்படி ராஜகோபால் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜகோபாலின் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவர் உடனடியாக சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டது.

ஒருநாள் கூட உங்களால் சிறையில் இருக்க முடியாதா? என கண்டித்த நீதிபதிகள், ராஜகோபாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News