செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ரூ.21 கோடி செலவில் அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2019-07-08 09:17 GMT   |   Update On 2019-07-08 09:17 GMT
தமிழகம் முழுவதும் உள்ள 2894 அரசு பள்ளிகளில் ரூ.21 கோடி செலவில் கண்காணிப்பு கேமிரா வசதிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:

சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

1. அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, நடப்பாண்டில் 124 கூடுதல் வகுப்பறைகள், 83 அறிவியல் ஆய்வகங்கள், 85 நூலக அறைகள், 84 கலை மற்றும் கைவினை அறைகள், 50 கணினி அறைகள், 92 மாணவர் கழிப்பறைகள், 104 மாணவியர் கழிப்பறைகளை புதிதாக கட்டுதல், 1,475 மாணவர் கழிப்பறைகளையும், 1,849 மாணவியர் கழிப்பறைகளையும் பழுது பார்த்தல், 149 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்துதல், 132 பள்ளிகளுக்கு 4,493 மீட்டர் நீளமுள்ள சுற்றுச் சுவர் எழுப்புதல், 1,649 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கழிப்பறைகள் அமைத்தல், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கென கைப்பிடியுடன் கூடிய 5,726 சாய்வு தளங்கள் அமைத்தல் மற்றும் 156 பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை பழுது பார்த்தல் ஆகிய பணிகள் 163 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

2. காலத்திற்கேற்ப மாற்றங்களை புகுத்தி, 12ஆம் வகுப்பு வரையிலான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டத்தின்படி 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் 2019-20ஆம் கல்வியாண்டின் பயன்பாட்டிற்கென அரசால் தயாரிக்கப்பட்டு உள்ளது.

பாடப்பொருள் சார்ந்த கூடுதல் தகவல்கள், மாணவரின் செயல்பாடுகள், படங்கள், மதிப்பீடு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பகுதிகள் போன்றவை உள்ளீடு செய்யப்பட்டு, செறிவூட்டப்பட்ட பாடப்புத்தகங்களாக விளங்குகின்றன.

இப்புத்தகங்களை ஆசிரியர்கள் சீரிய முறையில் பயன்படுத்தவும், அதன் மூலம் மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்திடவும், கற்றல் விளைவுகளை ஆய்வு செய்து, கற்றலில் உள்ள கடினமான பகுதிகளைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு, வகுப்பறை செயல்பாடுகளை மேம்படுத்திட, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவி புரியும் வகையில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 61 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

3. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்ய, 2,650 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 244 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் 21 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைத்துத்தரும்.



இத்திட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகள், மாணவியர் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

4. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்கும் திட்டம் இவ்வரசால், 2012-13 கல்வியாண்டு முதல் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரைபயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்குப் பதிலாக, 2020-21ஆம் கல்வியாண்டு முதல் ஷூ மற்றும் சாக்ஸ் 10 கோடியே 2 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் வழங்கப்படும். இதனால் 28 லட்சத்து 64 ஆயிரத்து 885 மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.

1. தமிழ்நாட்டில் உள்ள 112 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை தேசிய தர மதிப்பீட்டு சான்றிதழ் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த தேசிய தர மதிப்பீட்டு சான்றிதழ் பெறும் வகையில், மேலும் 10 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 54 கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

2. 1965ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்லூரிக் கல்வி இயக்ககம், 54 வருடங்களாக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த இயக்ககத்திற்கு தனியான தொரு கட்டடம் ஏற்படுத்திக் கொடுத்து, மின் ஆளுமை, கல்வி சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை முழுமையாக நிறைவேற்ற ஏதுவாக கல்லூரிக் கல்வி இயக்ககத்திற்கான நிர்வாக கட்டடத்துடன், சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககத்திற்கான அலுவலக கட்டடமும் சேர்த்து 3,534 சதுர மீட்டர் பரப்பளவில் 10 கோடி ரூபாய் செலவில் சென்னை, சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் கட்டப்படும்.

3. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ராஜூஸ் கல்லூரி ஆகியவற்றை முன்மாதிரி கல்லூரிகளாக மேம்படுத்தி, அதில் புதிதாக இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகள் தோற்றுவித்தல், புதிதாக வகுப்பறைகள் கட்டுதல், இருக்கும் வகுப்பறைகளை புதுப்பித்தல், புதிய ஆய்வுக் கூடம் கட்டுதல், ஆய்வுக்கூடத்தை புதுப்பித்தல், கணினிமயமாக்கப்பட்ட நவீனநூலகம் அமைத்தல், புதிய கருத்தரங்கம் கட்டுதல் மற்றும் வளாகமேம்பாடு ஆகிய பணிகள் தலா 4 கோடி ரூபாய் வீதம் 8 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

4. கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 98 அரசு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 92 அரசு கல்லூரிகள் சொந்த கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இந்த 92 அரசு கல்லூரிகளுக்கு தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சிறப்பு மானியமாக ஆண்டொன்றிற்கு 58 கோடி ரூபாய் வீதம் 2 ஆண்டுகளுக்கு 116 கோடி ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம், சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணாக்கர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி சூழல்கள் வெகுவாக மேம்படுத்தப்படும்.

5. கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 10 வகுப்பறை கட்டடங்கள், கருத்தரங்கு கூடம் மற்றும் பொது கருவிமயமாக்கல் ஆய்வுக் கூடம், சுற்றுச்சுவர், துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், நிதி அலுவலர் மற்றும் கல்விசார் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

6. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகளை உலக தரத்திற்கு மேம்படுத்த அதிநவீன உபகரணங்களுடன் கூடிய ஒரு மையம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

7. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பல்கலைக்கழக அறிவியல் கருவிமயமாக்கல் மையம் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News