செய்திகள்
சென்னை ஐகோர்ட்

ஜெயலலிதா நினைவு இல்லம் விவகாரம்- தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

Published On 2019-07-08 09:07 GMT   |   Update On 2019-07-08 11:40 GMT
மக்களின் வரிப்பணத்தில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது அவசியமா? என உயர்நீதின்றம் கேள்வி எழுப்பியது.
சென்னை:

சென்னை போயஸ்கார்டனில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வாழ்ந்த வீடான, வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வேதா நிலையத்தை, வெறும் 35 கோடிக்கு அரசு வாங்க உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.



இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்து தெரிவித்த நீதிமன்றம், மக்களின் வரிப்பணத்தில் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை, ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றவேண்டியதன் அவசியம் என்ன? என கேள்வி எழுப்பியது.

“ஜெயலலிதாவின் புகழை பரப்புவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அமைச்சர்கள் தினமும் ஜெயலலிதாவின் புகழைத்தான் பாடுகின்றனர். கோடநாட்டில் ஜெயலலிதா தங்கியிருந்தார் என்பதற்காக அதையும் நினைவு இல்லமாக மாற்றுவீர்களா?” என கேட்ட நீதிமன்றம், இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Tags:    

Similar News