செய்திகள்
சென்னை அழைத்துவரப்பட்ட முகிலன் பாலியல் வழக்கில் கைது
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் போலீசில் கொடுத்துள்ள பாலியல் புகாரில் முகிலனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் ராஜேஸ்வரி (வயது 37), கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முகிலன் மீது கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் மனு அளித்திருந்தார்.
அதில், முகிலன் செய்து வந்த சமூக சேவையால் ஈர்க்கப்பட்டு, அவருடன் இணைந்து சமூக சேவையாற்றி வந்தேன். கடந்த 26.2.2017 அன்று ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நெடு வாசலில் நடைபெற்ற போராட்டத்தில் அவருடன் பங்கேற்றேன். பின்னர் 27-ந் தேதி நெடுவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள காம்ப்ளக்சில் இருவரும் தங்கினோம்.
அப்போது முகிலன், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி, என்னை கட்டாயப்படுத்தி என்னுடன் உடலுறவு கொண்டார். இதுபோன்று பலமுறை என்னை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வமலர் மற்றும் போலீசார் முகிலன் மீது 417 (திருமணம் செய்து கொள்வதாக உத்தர வாதம் அளித்து ஏமாற்றுதல்), 376 (பாலியல் பலாத்காரம் செய்தல்) மற்றும் பெண்ணை மானபங்கப்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் முகிலனை குளித்தலை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாயமான முகிலன் திருப்பதியில் மீட்கப்பட்டுள்ளதால் அவரை கற்பழிப்பு வழக்கில் கைது செய்ய குளித்தலை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் சென்னை அழைத்துவரப்பட்ட முகிலனை போலீசார் பாலியல் வழக்கில் கைது செய்தனர்.