செய்திகள்
சென்னை உயர்நீதிமன்றம்

நளினிக்கு ஒரு மாதம் பரோல் அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு

Published On 2019-07-05 09:36 GMT   |   Update On 2019-07-05 09:36 GMT
மகளின் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு விண்ணப்பித்த நளினிக்கு ஒரு மாதம் மட்டும் பரோல் அளித்து சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டது.
சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் இருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

அதில், ‘என்னுடைய மகள் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும்.

எனவே, எனக்கு 6 மாதம் ‘பரோல்’ வேண்டும் என்று சிறைத்துறை தலைவர், வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை என் மனுவை பரிசீலிக்கவில்லை. கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் எனக்கு 6 மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் நேரில் ஆஜராகிவாதிட எனக்கு அனுமதி வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

நளினியை பாதுகாப்புடன் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளலாம். நளினியும், சிறை விதிகளை மீறாமல், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.


எனவே, ஜூலை 5-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு நளினியை ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறி இருந்தனர். இதன்படி நளினி இன்று ஜகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

6 மாத காலம் பரோல் அளிக்க வேண்டும் என்று வாதாடிய நளினியின் கோரிக்கையை ஏற்க மறுத்த தமிழக அரசுதரப்பு வழக்கறிஞர் ஒருமாதம் மட்டுமே பரோலில் விடுவிக்க முடியும் என்று ஆட்சேபனை தெரிவித்தார். சிறை விதிகளின்படி 6 மாதம் பரோல் வழங்க முடியாது, ஒரு மாதம் தான் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கவனித்த நீதிபதிகள் 6 மாதங்கள் பரோல் வழங்க சட்டத்தில் இடமில்லை என்பதால் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தீர்ப்பளித்தனர்.
Tags:    

Similar News