செய்திகள்
15 மாத கைக்குழந்தை அடித்துக்கொலை

திருச்சி அருகே 15 மாத கைக்குழந்தை அடித்துக்கொலை - பணத்தகராறில் வாலிபர் வெறிச்செயல்

Published On 2019-07-01 10:26 GMT   |   Update On 2019-07-01 10:26 GMT
திருச்சி அருகே பணத்தகராறில் 15 மாத கைக்குழந்தையை வாலிபர் அடித்த கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கல்லுப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரெங்கர். இவர் நேற்றிரவு தனது 15 மாத கைக்குழந்தையான நித்தீஸ்வரனை தூக்கி வைத்துக் கொண்டு, அப்பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 32) என்பவர், ரெங்கருடன் பேசிக்கொண்டிருந்த ஆனந்த் என்பவரின் சட்டைப்பையில் இருந்த 70 ரூபாயை எடுக்க முயன்றார். இதைப்பார்த்த ரெங்கர், எப்படி ஆனந்தின் சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுக்கலாம் என்று தட்டிக் கேட்டார். இதனால் அவருக்கும், செந்திலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த செந்தில், ரெங்கரிடம் எப்படி நீ என்னை தட்டிக் கேட்கலாம் என்று கூறி, மூங்கில் கட்டையால் தாக்க முயன்றார். அப்போது ரெங்கர் விலக முயன்ற போது, குழந்தை நித்தீஸ்வரன் தலையில் அடிபட்டது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. உடனே ரெங்கர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் குழந்தை நித்தீஸ்வரனை மீட்டு முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குழந்தை நித்தீஸ்வரன் இறந்தான்.

இந்த சம்பவம் குறித்து தொட்டியம் போலீசார் விசாரணை நடத்தி செந்திலை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பணத்தகராறில் குழந்தை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News