வால்பாறையில் காட்டு யானை தாக்கி காவலாளி பலி
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை குரங்குமுடி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (52). இவர் அப்பகுதியில் உள்ள எஸ்டேட் பங்களாவில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை இவர் பணிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் எஸ்டேட்டுக்கு வரவில்லை என நிர்வாகம் சார்பில் செல்வராஜ் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செல்வராஜ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை தேடி சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் செல்வராஜ் பிணமாக கிடந்தார்.
அவரை காட்டு யானை தாக்கி கொன்றது தெரிய வந்தது. இது குறித்து வால்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று செல்வராஜ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காட்டு யானை தாக்கி காவலாளி பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.