செய்திகள்
தமிழக சட்டசபை

சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதம் இன்று தொடக்கம்

Published On 2019-06-30 23:58 GMT   |   Update On 2019-06-30 23:58 GMT
தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. முதல் நாளில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் மீது விவாதம் நடக்கிறது.
சென்னை:

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜூன்) 28-ந் தேதி தொடங்கிய நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்க இருக்கிறது. முதல் நாளில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

காலை 10 மணிக்கு தொடங்கும் இன்றைய கூட்டத்தில் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இதில், தொகுதி சார்ந்த பிரச்சினைகள் அடிப்படையில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தொடர்ந்து எடுத்துக்கொள்ளப்படும் நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்) எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப இருக்கிறார்கள். குடிநீர் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் எழுப்பப்படும் என்று தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கை விவாதம் தொடங்குகிறது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள்.

இறுதியாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பேசுகிறார்கள். தங்களது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிட இருக்கிறார்கள்.
Tags:    

Similar News