வெள்ளகோவில் அருகே விபத்தில் பெண் பலி
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள லக்கம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கண்ணம்மாள் (37). சம்பவத்தன்று சக்திவேல் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் காடையூரான் வலசுக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து தங்களது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வெள்ளகோவில்- காங்கயம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அவர்கள் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் சக்திவேல் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கண்ணம்மாளை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.