செய்திகள்

பஸ் டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல்: 2 வாலிபர்கள் கைது

Published On 2019-06-26 09:04 GMT   |   Update On 2019-06-26 09:04 GMT
முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி நேற்று மாலை மாநகர பஸ் (101) சென்று கொண்டு இருந்தது. புது வண்ணாரப்பேட்டை சூரிய நாராயண தெரு அருகே வண்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மாநகர பஸ்சை முந்தி செல்ல முயன்றனர்.

இதில் பஸ் டிரைவர் பிரசாத்துக்கும் அந்த வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் பஸ் டிரைவர் பிரசாத், கண்டக்டர் சுரேஷ் ஆகியோரை தாக்கி தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய கோரி பஸ் எடுக்க மறுத்து டிரைவரும், கண்டக்டரும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றது.

தகவல் அறிந்ததும் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாநகர பஸ்சை டிரைவர் இயக்கினார்.

இதற்கிடையே பஸ் டிரைவரை தாக்கியதாக புது வண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டம் பகுதியை சேர்ந்த சதீஷ், தனபால் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News