செய்திகள்
நகைக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி.

நகைக்கடையில் ஊழியரை தாக்கி நகையை திருடிய வாலிபர்கள்

Published On 2019-06-26 03:11 GMT   |   Update On 2019-06-26 03:11 GMT
வியாசர்பாடி நகைக்கடையில் ஊழியரை தாக்கி நகையை கொள்ளையடித்த வாலிபர்களை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி உதவியால் போலீசார் தேடி வருகிறார்கள்.
பெரம்பூர்:

சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் விநாயகா என்ற பெயரில் நகைக்கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் மாலை 2 வாலிபர்கள் வந்தனர். அதில் ஒருவர் தொப்பி அணிந்து இருந்தார். மற்றொருவர் பாதி முகம் தெரியும் வகையில், முகத்தில் கைக்குட்டை கட்டி இருந்தார்.

இருவரும் தங்கமோதிரம் வாங்க வந்ததாக தெரிவித்தனர். உடனே கடை ஊழியர் சுதர்சனம் மோதிரங்களை எடுத்து காட்டினார். 2 வாலிபர்களும் மோதிரங்களை தங்களது கைவிரல்களில் மாட்டிக்கொண்டு அழகு பார்த்துக்கொண்டே இருந்தனர்.

ஆனால் அவர்கள் கையில் அணிந்த மோதிரங்களை கழற்றாமல் உள்ளே இருப்பதை எடு என்று சுதர்சனத்தை வற்புறுத்தினர். ஆனால் சுதர்சனம் விடாப்பிடியாக மோதிரங்களை கழற்றித்தருமாறு வலியுறுத்தியுள்ளார்.

அப்போது ஒரு வாலிபர் கடையில் இருந்து வெளியே சென்றார். மற்றொரு வாலிபர் கடையில் இருந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். அவரை ஊழியர் சுதர்சனம் கையை பிடித்து இழுத்தார். உடனே அந்த வாலிபர் சுதர்சனத்தை தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. வாலிபர்கள் 4 பவுன் தங்கநகைகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுதர்சனம் வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News