செய்திகள்

ஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு

Published On 2019-06-25 11:18 GMT   |   Update On 2019-06-25 11:55 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.  விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்கள் என முதலில் நிர்ணயிக்கப்பட்டது. 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

அதன்படி கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார். இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.



ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாத காரணத்தால் ஆணையத்தின் காலம் முதலில் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் இரண்டு முறை தலா 4 மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி 2019, பிப்ரவரி 24ம் தேதிக்குள் விசாரணையை முடித்திருக்க வேண்டும். இதையடுத்து மேலும் 4 மாதங்கள் விசாரணை நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 24 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஆறுமுகச்சாமி ஆணையத்தின் அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஆறுமுகச்சாமி ஆணையத்திற்கு ஐந்தாவது முறையாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News