செய்திகள்

வில்லியனூரில் திருமண மண்டப உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2019-06-25 09:26 GMT   |   Update On 2019-06-25 09:26 GMT
வில்லியனூரில் திருமண மண்டப உரிமையாளரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்:

வில்லியனூர் கணுவாப்பேட்டை முதல் வன்னியர் தெருவை சேர்ந்தவர் பத்ம நாபன் (வயது 65). விவசாயியான இவர் அந்த பகுதியில் திருமண மண்டபம் நடத்தி வருகிறார்.

நேற்று இவர் வீட்டு முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார் அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை தட்டி கொண்டு இருந்தார்.

இதனை பத்மநாபன் தட்டிக் கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து பத்மநாபனை தாக்கினார். இதில் காயம் அடைந்த பத்மநாபன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் பத்ம நாபனை தாக்கியது வில்லியனூர் சாமியார் தோப்பை சேர்ந்த மணி கண்டன் (வயது 19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News