செய்திகள்

பொம்மிடி அருகே மரத்தில் பிணமாக தொங்கிய வாலிபர் - போலீசார் விசாரணை

Published On 2019-06-25 06:42 GMT   |   Update On 2019-06-25 06:42 GMT
பொம்மிடி அருகே மரத்தில் பிணமாக தொங்கிய வாலிபர் அடித்து கொலையா? போலீசார் விசாரணை

பாப்பிரெட்டிபட்டி:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்துள்ள நடூர் அருகே அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு கார்த்திக் (வயது 26) என்ற மகன் உள்ளார். ராஜேந்திரனும் சுமதியும் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் சுமதி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். கார்த்திக் அரசு வேலை பெற தேர்வுக்கு படித்து வந்தார். சுமதி வேலையின் காரணமாக கோயம்புத்தூர் சென்றுள்ளார்.

இந்த நிலையில் சுமதியின் மகன் கார்த்திக் இன்று காலை பி.பள்ளி பட்டியில், கிழங்கு மில் எதிரே உள்ள புளிய மரத்தில் பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து பொம்மிடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இறந்தவர் பொம்மிடியைச் சேர்ந்த கார்த்திக் என தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கார்த்திக்கின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வந்த கார்த்திக் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். இதனால் அப்பகுதியே சோகமாக காட்சி அளித்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எவரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு உள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News