செய்திகள்

சூலூரில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி விபத்தில் பலி

Published On 2019-06-24 14:26 GMT   |   Update On 2019-06-24 14:26 GMT
சூலூரில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானார்.

கோவை:

மதுரை சுப்பிரமணிய புரத்தை சேர்ந்தவர் செல்வம் (39). இவரது தம்பி சோலை (32). இவர்கள் இருவர் மீதும் கொலை வழக்கு உள்ளது. இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் செல்வமும், சோலையும் கோவைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். சூலூர் பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வமும், சோலையும் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு செல்வம் இறந்தார். சோலை சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சூலூர் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். போலீசாரை பார்த்ததும் சோலை தப்பி ஓட முயன்றார். இதனால் பரபரப்பு உருவானது.

பின்னர் சோலையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது அண்ணன் மற்றும் தன் மீது மதுரையில் கொலை வழக்கு இருப்பதும், தங்களை போலீசார் தேடி வருவதாகவும் கூறினார்.

சோலை பிடிபட்டது குறித்து மதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவை வந்து சோலையை கைது செய்து மதுரை அழைத்து செல்ல உள்ளனர்.

Tags:    

Similar News