கோவை ஒண்டிப்புதூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது
சிங்காநல்லூர்:
கோவை சிங்காநல்லூர் வசந்தா மில் அய்யர் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவர் ஒண்டிப்புதூர் ரெயில்வே கேட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் கருணாகரனை வழி மறித்தனர். அவரை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றனர். இதனை பார்த்ததும் கருணாகரன் சத்தம் போட்டார்.
இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.அப்போது அந்த வழியாக சிங்காநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர் 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தார்.
அப்போது அவர்கள் ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த கண்ணன் (25), கிஷோர் (24) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். கைதான கண்ணன் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.