கோவை ஆர்.எஸ்.புரத்தில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு
கோவை:
கோவை ஆர்.எஸ்.புரம் கேப்டன் பழனிசாமி வீதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று மாலை தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கணபதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார். இன்று காலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது.அதில் வைக்கப்பட்டு இருந்த 8 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.மகேஷ் குமார் வெளியே செல்வதை நோட்ட மிட்ட மர்ம நபர் நகை-பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.நகை -பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.