இடப்பிரச்சினையில் வாலிபர் மீது கொதிக்கும் குழம்பை ஊற்றிய பானிபூரி கடைக்காரர்
வல்லம், ஜூன்.24-
தஞ்சையை அடுத்த வல்லம் வளையல்கார தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது40). போட்டோகிராபர்.இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் அண்ணாசாமி (50). வல்லத்தில் பானிபூரி கடை வைத்துள்ளார்.
இருவருக்கும் இடையே இடம் சம்மந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் முருகானந்தம் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் அண்ணா சாமி ஆத்திரமடைந்து பானிபூரி வியாபாரத்துக்காக சூடாக தயாரித்து வைத்திருந்த மசாலா குழம்பை எடுத்து சென்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முருகானந்தத்தின் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் முருகானந்தம் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து முருகானந்தம் வல்லம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.