ரூ.7 ஆயிரம் பணத்தகராறில் துப்பாக்கி காட்டி மிரட்டியவர் கைது
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் சக்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குல்தீப்சிங் (35). பார்சல் சர்வீஸ் நிறுவனம் நடத்திவருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார் (22) டிரான்ஸ் போர்ட் நிறுவனம் நடத்துகிறார். இவரது லாரியில் வெளியூர்களுக்கு பார்சல்களை குல்தீப்சிங் அனுப்பி வருகிறார்.
இந்த நிலையில் டெல்லிக்கு அனுப்பிய 2 பார்சல்கள் மாயமாகி விட்டது. எனவே ரூ.7 ஆயிரத்தை பிடித்துக் கொண்டு மீதி பணத்தை குல்தீப்சிங் கொடுத்தார்.
இதனால் சுனில் குமாருக்கும், குல்தீப்சிங்குக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சுனில் குமார் தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி குல்தீப்சிங்கை மிரட்டினார்.
இதுகுறித்து குல்தீப்சிங் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுனில்குமார் உள்பட 3 பேரை கைது செய்தனர். துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.