மதுரவாயல் அருகே லாரி மோதி பால் வியாபாரி பலி
போரூர்:
முகப்பேரைச் சேர்ந்தவர் லிங்கதுரை (வயது 21) பால் வியாபாரி. இன்று அதிகாலை அவர் வேலப்பன்சாவடியில் உள்ள கடைக்கு பால் பாக்கெட்டுகளை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வானகரம் அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக லிங்கதுரை மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. லாரி சக்கரத்தில் சிக்கிய லிங்கதுரை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் இறந்துபோன லிங்கதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.