குடிநீர் பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் - திருமாவளவன்
திருச்சி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, அண்டை மாநிலங்களில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவ தயாராக இருக்கிறார். ஆனால் தமிழக அரசு வறட்டு கவுரவம் பார்ப்பது வேதனையளிக்கிறது.
காவிரியில் இருந்தும், கிருஷ்ணாவில் இருந்தும் முறையாக நீர் கிடைக்க வில்லை. இவற்றை பெற்றால் கூட சென்னை பெருநகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முடியும்.
இதற்காக டெல்லியில் அழுத்தம் கொடுப்பதற்கு பதில் யாகம் வளர்ப்பது மெத்தனப்போக்கு, தமிழகக்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். வரக் கூடிய நாட்களில் சென்னை மட்டுமல்ல, தமிழகமே குடி நீரின்றி தவிக்கும் சூழல் உருவாகும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் குடிநீரின்றி வன விலங்குகள் உயிரிழக்கின்றன. இது தேசத்தின் பிரச்சினை என்பதால் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.