செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் பல்லாக்கு தூக்குவது?- கே.என்.நேரு பேச்சு

Published On 2019-06-22 05:39 GMT   |   Update On 2019-06-22 06:47 GMT
இன்னும் எத்தனை காலம்தான் காங்கிரசுக்கு பல்லாக்கு தூக்குவது என்று தி.மு.க. சார்பில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி:

தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை கண்டித்தும், சீராக குடிநீர் வழங்க கோரியும் தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ, தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்படும் என்று முன்பே தெரிந்திருந்தும் குடிநீர் பிரச்சனைக்கு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தை கண்டித்தும், முதல்-அமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரின் நிர்வாக படுதோல்விகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அ.தி.மு.க. அரசு காவிரி தண்ணீரை வீணாக கடலில் கலக்க செய்து விட்டனர். இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீரை சேமித்து வைத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.


மு.க.ஸ்டாலினின் வியூகத்தால் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நம்முடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இருப்பினும் இன்னும் எத்தனை காலம்தான் காங்கிரசுக்கு பல்லாக்கு தூக்குவது என்று தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். திருச்சி மாவட்டத்திலாவது தி.மு.க. தனித்து போட்டியிட தலைமையை வலியுறுத்துவேன் என்றார்.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு எதிராக கே.என். நேரு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News