செய்திகள்

அரியாங்குப்பத்தில் கல்வித்துறை அதிகாரி வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்தவன் கைது

Published On 2019-06-21 12:03 GMT   |   Update On 2019-06-21 12:03 GMT
அரியாங்குப்பத்தில் கல்வித்துறை அதிகாரி வீட்டில் நகை- பணத்தை கொள்ளையடித்தவனை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்:

அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்தவர் பிரேமா (வயது57). கணவரை இழந்த இவர் புதுவை அரசின் கல்வித்துறையில் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2-வது மகளுக்கு விருத்தாசலத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 16-ந்தேதி அரியாங்குப்பத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக பிரேமா வீட்டை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். வீட்டில் வைத்திருந்த ரூ. 4 லட்சம் ரொக்கபணம், 3½ பவுன் நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

இதுகுறித்து பிரேமா அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளையரை கண்டுபிடிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதையடுத்து இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் ஆகாஷ் என்ற வாலிபர் கொள்ளை நடந்த மறுநாளில் இருந்து நண்பர்களுக்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்து வந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது கல்வித்துறை அதிகாரி பிரேமா வீட்டில் ஆகாஷ் நகை-பணத்தை திருடி நண்பர்களுக்கு செலவு செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்துபோலீசார் ஆகாஷை கைது செய்து இந்த கொள்ளையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆகாஷ் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News