செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்களுக்கு நோய் பாதிப்பு - ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

Published On 2019-06-21 03:16 GMT   |   Update On 2019-06-21 03:16 GMT
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்தது.
சென்னை:

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்தது.

தூத்துக்குடியில் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சம்பு கல்லோலிகர் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-

வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க கொள்கை அடிப்படையில் பல்வேறு நிபந்தனைகளுடன் தான் அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல், காற்று, தண்ணீர் மாசடையும் வகையில் ஆலைக்குள் கழிவுகளை தேக்கி வைத்ததால், 2013-ம் ஆண்டு விஷவாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்கள் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் ஆலைக்கான உரிமத்தை புதுப்பிக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. நேரில் ஆய்வு செய்தபோது விதிமுறைகளை ஆலை நிர்வாகம் பின்பற்றாத காரணத்தால் ஆலையை தொடர்ந்து இயக்கக்கூடாது என்று 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிடப்பட்டது.

ஆனால் 2018-ம் ஆண்டு மே மாதம் திடீரென நடத்தப்பட்ட ஆய்வில், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை மீறி ஆலை நிர்வாகம் உற்பத்தியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆலையை மூடவும், மின்இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டது. 2018-ம் ஆண்டு மே 28-ந்தேதி ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடுக்கப்பட்டு, ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.

நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய காரணத்தால்தான் ஆலை மூடப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு இந்த ஆலை நிர்வாகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து, அதை தூத்துக்குடி சுற்று வட்டாரப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உத்தரவிட்டது.

பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டக்கூடிய இந்த நிறுவனத்துக்கு ரூ.100 கோடி என்பது மிகவும் சொற்ப தொகைத்தான். ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் என்பதால் அந்த ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு முதல் மூடப்பட்டது வரை ஈட்டிய லாபம் எவ்வளவு? என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 51 தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதில் 33 நிறுவனங்கள் எந்த கழிவையும் வெளியேற்றுவதில்லை. மீதமுள்ள 18 தொழிற்சாலைகளில் ஸ்டெர்லைட் ஆலையின் 4 யூனிட்டுகள் காற்றையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது. எஞ்சிய 14-ல் 2 ஆலைகள் வெளியேற்றும் கழிவுகள் சூரிய ஒளியில் ஆவியாகிவிடுகின்றன.

அபாயகரமான அளவில் விஷவாயுவை வெளியேற்றக்கூடிய ஒரே ஆலை, ஸ்டெர்லைட் மட்டுமே. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுவை தமிழக அரசும், நீதித்துறையும் கண்மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இந்த ஆலை ஏற்படுத்தும் மாசுவின் காரணமாகவே, தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

குடிநீரும் குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத தண்ணீராக மாறியுள்ளது. ஆலை மூடிய பிறகு நிலத்தடி நீரின் தரம் மேம்பாடு அடைந்துள்ளது. இந்த ஆலை மூடப்பட்டதால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுவது மிகவும் அபத்தமானது.

ஏனெனில், சுமார் ரூ.3 ஆயிரம் கோடி மூலதனத்துடன் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, ஒவ்வொரு ஆண்டும் ரூ.2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. அதனால், இந்த ஆலையை மூடியதால் இழப்பு எதுவும் இல்லை. எனவே, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 27-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News