செய்திகள்

நீலகிரியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு - காய்கறிகள் விலை மேலும் உயரும் அபாயம்

Published On 2019-06-20 10:06 GMT   |   Update On 2019-06-20 10:06 GMT
நீலகிரியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் மலைக்காய்கறிகள் விலை மேலும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி:

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பருவமழை 34 சதவீதம் குறைவாக பெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது.

இதன்பாதிப்பு மலைப்பிரதேசமான நீலகிரியையும் விட்டு வைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழையும் நீலகிரி மாவட்டத்துக்கு கைகொடுக்கவில்லை. இதனால் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக உள்ள அணைகளில் 50 சதவீதம் தண்ணீர் கிடுகிடுவென குறைந்து விட்டது.

ஊட்டி பார்சன்ஸ்வேலி, டைகர்ஹில், மார்லிமந்து, கோரிசோலை அணை, குன்னூர் ரேலியா அணை, கேத்தி காட்டேரி அணை, கோத்தகிரி ஈலடா அணை உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது.

தனியார் விடுதி மற்றும் தங்கும் இடங்களில் லாரிகள் மூலம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகிறார்கள். வழக்கமாக ஒரு லாரி தண்ணீர் ரூ.3 ஆயிரம் கொடுத்து வாங்கினர். தற்போது அதே அளவு தண்ணீர் ரூ.6 ஆயிரம் கொடுத்து வாங்கி வருகிறார்கள்.

நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. 7 நாட்களுக்கு ஒருமுறை லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.

இதில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மலைக்காய்கறி விளைச்சல் பெரும் சரிவை கண்டுள்ளது. இதனால் மலைக்காய்கறிகள் விலை மேலும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News